புதன், 31 ஜூலை, 2013

கபிலரின் பூக்கள் - 06 - வெட்சி - Ixora coccinea

வெட்சி மலர்




தாவரப்பெயர்: Ixoreae

வளரியல்பு: குட்டை செடி

 தற்போதைய பெயர்: இட்லிப் பூ, தெச்சி 

இலக்கியம் :
உச்சிக் கொண்ட ஊசி வெண்தோட்டு வெட்சி மாமலர் - புறநானூறு 100-5
பொருள்: அதியமான் போர்க்கோலம் பூண்டபோது போந்தை(பனை), வெட்சி, வேங்கை ஆகிய மூன்று பூக்களையும் கலந்து கட்டிய கண்ணியைத் தலையில் சூடியிருந்தான்.

செங்கால் வெட்சி - திருமுருகாற்றுப்படை 21
பொருள்: முருகப்பெருமானை வழிபட்ட சூரர மகளிர் சூடியிருந்த மலர்களில் சிவந்த காம்பினைக் கொண்ட வெட்சியும் இருந்தது. 

குறிஞ்சிப்பாட்டு 63
பொருள்: குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று வெட்சி.

இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி - அகநானூறு 133-14
பொருள்: காடைப் பறவையின் கால்நக முள் போல வெட்சிப்பூ முதிரும். 

புறநானூறு 202-1
பொருள்: வெட்சிக்கானத்தில் வேட்டுவர் கடம்பு மானைத் துரத்திப் பிடிப்பர்.

ஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர் - பரிபாடல் 22-22
பொருள்: வையையில் நீரீடச் சென்ற மகளிர் வெட்சிப் பூவைத் தலையில் அணிந்திருந்தனர்.

புல்லிலை வெட்சி - கலித்தொகை 103-2
பொருள்: ஏறு தழுவச் சென்றபோது, இடையர் குலக் காளையர் சூடியிருந்த பன்மலர்க் கண்ணியில் வெட்சிப்பூ அதன் இலைகளுடன் சேர்த்துத் தொடுக்கப்பட்டிருந்த்து.

வெட்சி நிரை கவர்தல் - சங்க காலத்தில் எதிரி நாட்டுடன் போர் புரிய விரும்புவதை சூசகமாக தெரிவிக்க அந்த நாட்டு பசுக்களை கவர்ந்து வருவர், அப்போது வெட்சி பூவை சூடிச்செல்வர்.

தன்மைகள்: 
வெட்சி என்பது ஒருவகைக் காட்டுப்பூ. அழகுக்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது.

நன்றி: விக்கிபீடியா, http://www.flowersofindia.net/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக